பெரம்பலுார் - மானாமதுரை நெடுஞ்சாலை மோசம் சுங்கச்சாவடியை மீண்டும் துவக்கி, பராமரிக்க கோரிக்கை
பெரம்பலுார் - மானாமதுரை நெடுஞ்சாலை மோசம் சுங்கச்சாவடியை மீண்டும் துவக்கி, பராமரிக்க கோரிக்கை
ADDED : ஏப் 02, 2025 01:38 AM

பெரம்பலுார்:பெரம்பலுாரில் துவங்கி பேரளி, அரியலுார், திருவையாறு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்துார், சிவகங்கை, மானாமதுரை வரை, 212 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது.
சாலை விரிவாக்கத்தின் போது, எந்த நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. இந்த சாலையின் இருபுறமும் வாகனம் செல்லும் அளவிற்கு ரோடு புதிதாக போடப்பட்டது. பின், ஏற்கனவே உள்ள சாலையில் தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, பெரம்பலுார் - அரியலுார் சாலையை, ஆத்துார் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்து, நெடுஞ்சாலை எண் 136 என மாற்றப்பட்டது. கடந்த, 2007ல் இந்த தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்தது.
இச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிராமம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. எனினும், நில பிரச்னை, வழக்கு போன்ற காரணங்களால் நான்கு ஆண்டுகளாக செயல்படாததால், அவ்வழியாக வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.
இந்நிலையில், 2021 ஜூலை 24ல் பேரளி சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வந்தது. சாலை பணி முழுதுமாக நிறைவு பெறாமலும், போதிய அளவு விரிவுபடுத்தாமலும், சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சி, பேரளி மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, ஆக., 5ல் சுங்கச்சாவடி மூடப்பட்டது.
இந்த தேசிய நெடுஞ்சாலையை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அரியலுாரில் செயல்படும் அரசு, தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு ஏராளமான லாரிகள் மூலப்பொருட்களை ஏற்றிச் செல்கின்றன.
இச்சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி செல்வதால், பெரம்பலுார் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பு, அரியலுார் முன் உள்ள அல்லிநகரம் வரை படுமோசமாக உள்ளது.
சில இடங்களில் சாலை வெடித்துள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டிகள், விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுங்கச்சாவடி இல்லாததால் இச்சாலை பராமரிப்பின்றி உள்ளது. சுங்கச்சாவடி திறந்தாவது இச்சாலையை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

