‛அந்தோணி திவ்யா' பெயரால் கோவிலில் திருமணம் மறுப்பு
‛அந்தோணி திவ்யா' பெயரால் கோவிலில் திருமணம் மறுப்பு
ADDED : மார் 10, 2024 01:38 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோவிலில் நடந்த திருமணத்தில், மணமகளின் பெயர் கிறிஸ்துவ பெயர் போன்று இருந்ததால், கோவிலுக்குள் வைத்து திருமணம் நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் பனையூரைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் கண்ணனுக்கும், தருவைகுளத்தைச் சேர்ந்த முருகன்- - ரேவதி தம்பதியின் மகள் அந்தோணி திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி துாத்துக்குடி, பாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் என்ற சிவன் கோவிலில், முருகன் சன்னிதியில் திருமணம் நடத்த முடிவானது.
இரு வீட்டாரும் கோவிலுக்கு வந்திருந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்ததில், மணமகளின் பெயர் அந்தோணி திவ்யா என, கிறிஸ்துவ பெயராக இருந்ததால், கோவிலுக்குள் வைத்து திருமணம் நடத்த அனுமதி மறுத்தனர்.
இதனால், திருமணம் காலை, 11:00 மணியளவில், கோவிலுக்கு வெளியே நடந்தது. தாங்கள், 'ஹிந்து நாடார்' என தெரிவித்தும், ஆவணங்களை காட்டிய பிறகும், மணமகள் பெயரில் அந்தோணி திவ்யா என்று இருப்பதால், அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக, இரு தரப்பு உறவினர்களும் புகார் தெரிவித்தனர்.

