தகவல் வழங்காததால் ரூ.5,000 இழப்பீடு தர காவல் துறைக்கு உத்தரவு
தகவல் வழங்காததால் ரூ.5,000 இழப்பீடு தர காவல் துறைக்கு உத்தரவு
ADDED : டிச 14, 2025 12:44 AM
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர், தகவல் பெறும் சட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலக பொதுத்தகவல் அலுவலருக்கு, 2021ல் தகவல் கேட்டு விண்ணப்பித்தார்.
அதில், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த, சப் - இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜா, பாலசிங்கம், இன்ஸ்பெக்டர் மூர்த்தி உள்ளிட்ட சிலரின் ஆண்டு சொத்து விபர அறிக்கை நகல்கள், தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட சில அரசாணைகள் என, மூன்று விதமான தகவல்களை கேட்டிருந்தார்.
அவருக்கு தகவல் வழங் கப்படாததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் பொதுத்தகவல் அலுவலருக்கு, தகவல் ஆணையர் இளம்பரிதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், 2021ல் விண்ணப்பித்த மனுவுக்கு, உரிய காலத்திற்குள் தகவல் வழங்கவில்லை.
எனவே, பொது அதிகார அமைப்பு சார்பில், மனுதாரருக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், மனுதாரர் கோரியுள்ள அரசாணைகள் எதுவாக இருப்பினும், அவற்றை வரும் 18ம் தேதி, நேரில் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

