பிளான் அப்ரூவல் வழங்க 20,000 ரூபாய் லஞ்சம்; பரமக்குடி நகரமைப்பு அதிகாரி கைது!
பிளான் அப்ரூவல் வழங்க 20,000 ரூபாய் லஞ்சம்; பரமக்குடி நகரமைப்பு அதிகாரி கைது!
UPDATED : ஜன 23, 2025 11:29 AM
ADDED : ஜன 23, 2025 11:21 AM

பரமக்குடி: வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் வழங்குவதற்காக, 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பரமக்குடி நகராட்சி நகரமைப்பு அலுவலர் பர்குணன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமான நான்கு மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து பிளான் அப்ரூவல் கேட்டபோது, டி.பி.ஓ., பர்குணன், தனக்கு ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை வழங்காத நிலையில் பைல்கள் அப்படியே கிடக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஜினியர், லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 20 ஆயிரம் ரூபாயை பர்குணனுக்கு, ஜிபே., மூலம் அனுப்பும்படி தெரிவித்தனர். அதன்படி, அவரும் அனுப்பியுள்ளார்.
அதனை ஆதாரமாக வைத்து 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பர்குணனை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

