75 புதுமுகங்களை வேட்பாளராக களமிறக்க பழனிசாமி திட்டம்
75 புதுமுகங்களை வேட்பாளராக களமிறக்க பழனிசாமி திட்டம்
UPDATED : டிச 13, 2025 01:22 AM
ADDED : டிச 13, 2025 01:21 AM

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் 75 புதுமுகங்களை வேட்பாளர்களாக களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், 'இன்றைக்கு பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் தான், நாளைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள்' என்றார். அவரது பேச்சுக்கு, பொதுக்குழுவில் பலத்த கரகோஷம் காணப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலில், புதுமுகங்கள் 50 பேருக்கு 'சீட்' வழங்கப்பட்டது. அதில், பழனிசாமியின் தீவிர விசுவாசிகள் 15 பேர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுக்கு பின், தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக, தன் விசுவாசிகளுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், பணம் படைத்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் சிலரை தேர்வு செய்து போட்டியிடும்படி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், தேர்தல் தோல்விக்கு பயந்து, அவர்கள் தயங்கினர். இதனால், தகுதியான வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால், சில தொகுதிகளில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே, கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட தயங்கியவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதே சமயம், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் 15 பேர் வரை, சட்டசபை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளது.
தற்போதைய மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருக்கும் 'சீட்' உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 46 தனி தொகுதிகளில், கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிகமாக ஒதுக்கி கொடுத்தும், அக்கட்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, இந்த தேர்தலில், 35 தனி தொகுதிகளில் அ.தி.மு.க.,வே போட்டியிட திட்டமிட்டுள்ளது.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பகுதி, நகர, ஒன்றிய செயலர்களை வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்தார்; அவர்கள் வெற்றி பெற்றனர். அதனால், ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பழனிசாமி ஆலோசித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

