ADDED : ஏப் 11, 2025 07:41 PM
சென்னை:'கருணாநிதியால் வளர்க்கப்பட்ட, நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறு. மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக, என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவிக்கிறேன்' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை, அருவருக்கும் பெயர் கொண்டு அழைப்பதை மாற்ற, அவர்களை கருணாநிதி, கருணை உள்ளத்தோடு, 'மாற்றுத்திறனாளிகள்' எனப் பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில், பேச்சின் வேகத்தில், மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என, முதல்வர் ஸ்டாலின், என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே, இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறு. மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக, என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவிக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எந்த அளவிற்கு வருந்தி இருப்பார் என்பது எனக்கு தெரியும். அவருக்கு என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என, உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

