டெல்டா மாவட்டங்களில் ரூ.399 கோடியில் 20 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்படும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
டெல்டா மாவட்டங்களில் ரூ.399 கோடியில் 20 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்படும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
ADDED : ஏப் 09, 2025 01:44 AM
சென்னை:“தஞ்சை, திருவாரூர் உட்பட ஐந்து டெல்டா மாவட்டங்களில், 399 கோடி ரூபாயில், 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு வளாகம் அமைக்கப்படும்,” என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
l நுகர்வோர் சேவைகளை மேம்படுத்த, 20 லட்சம் ரூபாயில், நுகர்வோர் குறைதீர் இணையதளம், மொபைல் செயலி உருவாக்கப்படும்
l தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய 20 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 399.19 கோடி ரூபாயில் கட்டப்படும்
l காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 49,000 டன் கொள்ளளவில், ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 69.82 கோடி ரூபாயில் கட்டப்படும்
l தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நிரந்தர கட்டடங்கள், தலா 30 லட்சம் ரூபாய் வீதம், 15 கோடி ரூபாயில் கட்டப்படும்
l தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், அலுவல் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், கொள்முதல் மற்றும் பொது வினியோக திட்ட பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த, 'இ - ஆபீஸ்' எனப்படும், மின் அலுவலக செயலாக்கம், 100 சதவீதம் அமல்படுத்தப்படும்
l அதிநவீன வசதிகளுடன் கூடிய, அதிக திறனில் நெல் கொள்முதல் நிலையங்கள், திருவாரூரில் இரண்டு; நாகை, மயிலாடுதுறையில் தலா ஒன்று அமைக்கப்படும்
l ஒட்டன்சத்திரத்தில், அலுவலகம் மற்றும் எடைமேடையுடன் கூடிய 3,400 டன் கொள்ளளவு உடைய நவீன சேமிப்பு கிடங்கு; 5 கோடி ரூபாயில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

