'வேறு கோர்ட்டில் சரணடைவோரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை'
'வேறு கோர்ட்டில் சரணடைவோரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை'
ADDED : மார் 08, 2024 10:47 PM
சென்னை:'குற்ற வழக்கில் உரிய நீதிமன்றத்தில் அல்லாமல், வேறு நீதிமன்றங்களில் சரண் அடைந்தால், காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்துார் தி.மு.க., பிரமுகர் ஆராமுதன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த ஐந்து பேர், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மனுதாக்கல்
இவர்களில் ஒருவர், 18 வயது நிரம்பாதவர் என்பதால், மற்ற நான்கு பேரது சரண்டரை ஏற்று, அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க, சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாம்பரம் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனுத்தாக்கல் செய்தார். மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரண் அடைய வேண்டும்; வேறு நீதிமன்றங்களில் சரண் அடைய முடியாது.
''சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் சரண் அடைந்ததை ஏற்றிருக்கக் கூடாது. இதை அனுமதித்தால், போலி நபர்களை சரண் அடைய வைப்பர். எனவே, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
உத்தரவு
மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
இந்திய தண்டனை சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பான வழக்கில், அதிகாரவரம்பு இல்லாத மாஜிஸ்திரேட் முன், தானாக ஒருவர் சரண் அடைந்தால், அவரை காவலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்க அந்த மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் இல்லை.
இதில், அதிகாரவரம்பு என்பது, அந்த மாஜிஸ்திரேட்டின் விசாரணைக்குள் வரும் பகுதிகளை குறிக்கும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, மார்ச் 6 வரை காவலில் வைக்க சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுஉள்ளார்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள், தற்போது, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. மாஜிஸ்திரேட் உத்தரவில் குறுக்கிடுவதில் எந்த பலனும் இல்லை.
எனவே, வழக்கை விசாரிக்க அதிகார வரம்பு இல்லாத மாஜிஸ்திரேட் முன் தானாக முன்வந்து சரண் அடைந்து, அதற்கான மனுவை தாக்கல் செய்தால், அந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல.
அந்த மனுக்களின் அடிப்படையில், காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க முடியாது.கண்டிப்பு
அதிகாரவரம்பு இல்லாத மாஜிஸ்திரேட் முன், ஒருவர் தானாக முன்வந்து சரண் அடைந்தால், அவரை தங்கள் வசம் எடுத்து சட்டப்படி அணுகும்படி, அருகில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிக்கு உத்தரவிடலாம்.
இந்திய தண்டனை சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பாகவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, மாஜிஸ்திரேட்டுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

