ADDED : ஜன 11, 2024 02:05 AM
சென்னை:தி.மு.க., அயலக அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு கருத்தரங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது.
அதில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது: தி.மு.க.,வின் வெளியுறவு துறையாக, அயலக அணி செயல்படுகிறது. இந்த அணி உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கம், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பது தான்.
தி.மு.க., அயலக அணிக்கு, 37 நாடுகளில் அமைப்பு இருக்கிறது. எல்லா நாடுகளிலும் அயலக அணியை பலப்படுத்த வேண்டும்.
சமூக ஊடகங்களில், திராவிடத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்புகின்றனர். பா.ஜ.,வின் பெயரால் மட்டும் அவதுாறுகளை பரப்புவது கிடையாது. மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும், தமிழின் பெயராலும் கூட, திராவிடத்தின் மீது அவதுாறுகளை பரப்புகின்றனர்.
அவர்கள் எத்தனை முகமூடிகள் வேண்டுமானாலும் போட்டு வரட்டும். அவர்களை முறியடிக்க, நமக்கு முகமூடிகள் தேவையில்லை.
ஈ.வெ.ரா.,வின் முகமும், அண்ணாதுரையின் எழுத்தும், கருணாநிதியின் பேச்சும் போதும்.
இவ்வாறு பேசினார்.

