வழக்கை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் வேல்ஸ் சட்டப்பள்ளி விழாவில் நீதிபதி மகாதேவன் அறிவுரை
வழக்கை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் வேல்ஸ் சட்டப்பள்ளி விழாவில் நீதிபதி மகாதேவன் அறிவுரை
UPDATED : செப் 21, 2025 01:03 AM
ADDED : செப் 21, 2025 01:02 AM

சென்னை:''நீதிமன்றத்திற்குள் நுழைந்ததும், வழக்கை ஒரு நிமிடத்தில் எப்படி எடுத்துக் கூறலாம் என கற்றுக்கொள்ள வேண் டும்,'' என, வேல்ஸ் சட்டப் பள்ளி விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
![]() |
சென்னை பல்லாவரம் வேல்ஸ் சட்டப் பள்ளியின் 10ம் ஆண்டு நிறைவு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. அதன் வேந்தர் ஐசரி கே.கணேஷ் வரவேற்றார்.
உயரிய நோக்கம் சிறப்பு விருந்தினராக, உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டீஷ்வர் சிங் பேசியதாவது:
சட்டம் என்பது வெறுமனே பட்டம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவை பெறுவதே, சட்டக் கல்வியின் உயரிய நோக்கம்.
விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நிலைப்புத் தன்மை ஆகியவை இக்கால வழக்கறிஞர்களுக்கு தேவை. இந்திய அரசியல் சாசனம், அனைத்து பிரச்னைகளை தீர்ப்பதற்கான கருவூலமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கியமான துறை உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசியதாவது:
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடைய வாழ்விலும், சட்டமும், நீதியும் அனைத்து விஷயங்களிலும் பங்கெடுக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் சட்டமும், நீதியும் பின்னி பிணைந்திருக்கிறது. கல்வி சார்ந்த துறைகளில், சட்டம் தான் முக்கியமான துறை.
சட்டத் துறையை தேர்ந்தெடுக்கக் கூடியவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கணமும் இன்றியமையாதது.
கிடைக்கக்கூடிய வாய்ப்பை எந்த விதத்தில் பயன்படுத்துகிறீர்களோ, அதை ஒட்டி தான் வாழ்க் கையின், வெற்றியின் முதல் படி அமைக்கப்படும்.
சட்டம் படிப்பதை கடந்து, அத்துறை சார்ந்த அறிவை எந்த விதத்தில் உருவாக்குகிறீர்களோ, அந்த விதத்தில் தான் வாழ்வின் அடுத்த கட்டம் நகரும்.
நீதிமன்றத்திற்குள் நுழைந்ததும், உங்கள் வழக்கை, ஒரு நிமிடத்தில் எப்படி எடுத்துக் கூறலாம் என கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான், வெற்றிகரமான வழக்கறிஞராக மாறுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல் குமார், இளந்திரையன், பரத சக்கரவர்த்தி, கலைமதி, 'வேல்ஸ்' குழுமங்களின் துணைத் தலைவர் பிரீதா கணேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், தமிழில் வழக்காடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 'புஷ்பா ஐசரி வேலன்' பெயரில் விருது, பரிசு வழங்கப்பட்டன.