டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ADDED : ஜூலை 31, 2025 04:59 PM

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17ம் தேதி அவரது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக பேட்டியளித்திருந்தார். தனது அலுவலக வாகனத்தை மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே இறங்கிக் கொண்டு அனுப்பி வையுங்கள் என டிஎஸ்பியான தன்னிடம் அவமரியாதியாக பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த 20ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனை அடுத்து டி.எஸ்.பிசுந்தரேசன் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் எஸ்பி இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் வடக்கு மண்டலத்துக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை இயக்குநகரத்திலிருந்து அளிக்கப்பட்ட உத்தரவில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், நிர்வாக அடிப்படையில் உடனடியாக வடக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, பணியில் சேரும் தேதி, பணியமர்த்தப்படும் இடத்தை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

