மைசூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கல்வெட்டு படிகள் அழியும் அவலம்
மைசூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கல்வெட்டு படிகள் அழியும் அவலம்
UPDATED : மார் 13, 2024 02:41 AM
ADDED : மார் 12, 2024 08:05 PM

சென்னை:மத்திய தொல்லியல் துறையின் மைசூரு அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட, தமிழ் கல்வெட்டு படிகள் அழியும் நிலையில் உள்ளதாக, தொல்லியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர், 1861ல் மத்திய தொல்லியல் துறையை பெங்களூரில் உருவாக்கினார். அடுத்த ஆண்டு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரான சென்னைக்கு மாற்றினார்.
புகார்
தொடர்ந்து சென்னை மாகாணத்தில் இருந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்து, அவற்றின் மைப்படிகளை சேகரித்தார். அவற்றை சென்னையின் தட்ப வெப்பநிலையில் பாதுகாப்பது கடினமாக இருந்தது.
அதனால், 1903ல் ஊட்டிக்கு மாற்றினார். பின், 1966ல் அவை மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 60,000த்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு படிகளும், செப்பு பட்டயங்களும் இருந்தன.
இந்நிலையில், கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி பிரச்னை உருவான போது, அங்கிருந்த கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய சென்ற, தமிழக அறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், அவை சிதைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அவற்றை தமிழகத்தில் பாதுகாக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 2022ல் 17,000 தமிழ் கல்வெட்டு படிகள் மட்டும், சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டன.
ஆனால், அவற்றை பாதுகாக்க, 'ஏசி' அறை வசதி செய்யப்படவில்லை. அத்துடன், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கூடுதலாக கல்வெட்டு ஆய்வாளர்களையும், இதுவரை மத்திய தொல்லியல் துறைநியமிக்கவில்லை.
குற்றச்சாட்டு
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெட்டிகளில் இருக்கும் கல்வெட்டு படிகள் சிதைந்து அழியும் நிலையில் உள்ளதாகவும், அவற்றை பார்க்க ஆய்வாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழந்தமிழ் கல்வெட்டு படிகள், தமிழகத்தில் அழியும் நிலையை கண்டு வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

