கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் நாடு திரும்ப சீனா உதவி: நன்றி தெரிவித்தது இந்தியா
கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் நாடு திரும்ப சீனா உதவி: நன்றி தெரிவித்தது இந்தியா
ADDED : செப் 11, 2025 10:03 PM

பீஜிங்: கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் நேபாளம் வழியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்ததற்கு சீனாவுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மானசரோவர் அமைந்துள்ளது. இங்கு செல்ல சீன அரசின் அனுமதி முக்கியம். கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையிலான மோதல் காரணமாக இந்த யாத்திரை நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் துவங்கி உள்ளது. மானசரோவருக்கு, உத்தரகாண்டின் லிபுலேக் கணவாய், சிக்கிமின் நாது லா கணவாய், நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய 3 வழிகளில் செல்ல லாம். இந்தாண்டு யாத்திரை சென்றவர்களில் பலர் காத்மாண்டு வழியாக சென்றனர்.
இச்சூழ்நிலையில், நேபாளத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக காத்மாண்டு வழியாக மானசரோவர் வந்தவர்கள் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேபாளத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக தனியார் மூலம் காத்மாண்டு வழியாக கைலாஷ் மானசரோவர் வந்தவர்களை பாதித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திபெத் மற்றும் சீனாவில் உள்ள இந்தியர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். உரிய முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுடன், உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறியிருந்தது.
இந்நிலையில் சீன மற்றும் திபெத் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக நேபாளம் வழியாக மானசரோவர் யாத்திரை வந்தவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து சீனாவிற்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எல்லையை கடக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்கள் நேபாளம் வழியாக பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் இந்தியா திரும்ப முடிகிறது எனு தெரியவந்துள்ளது. திபெத் அதிகாரிகளுக்கும், சீன வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். தூதரகத்தின் உதவி எண்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.