நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.319 ஆக உயர்வு!
நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.319 ஆக உயர்வு!
ADDED : மே 19, 2024 04:24 AM

சென்னை, மே 19- நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான தினக்கூலி, 319 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2006 பிப்ரவரியில் மத்திய அரசால் துவக்கப்பட்டது. ஒவ்வொரு நிதியாண்டிலும், உடல் உழைப்பை வழங்க முன்வரும் ஊரக குடும்பங்களுக்கு, 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
குடும்பத்தில் உள்ள வயது வந்த நபர்கள் ஒவ்வொருவரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.
கூடுதலாக 10 சதவீதம்
தமிழகத்தில், 2017 - 18ம் ஆண்டு முதல், அனைத்து ஊராட்சிகளிலும், இப்பணியாளர்களுக்கு மின்னணு வருகைப் பதிவேடுபயன்படுத்தப்படுகிறது.
பணி செய்யும் இடம், 5 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் வாழ்விட தொகையாக, அவர்கள் பெறும் சம்பளத்தில், 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நடுதல், தடுப்பணைகள் கட்டுமானம், மீள் நிரப்பு குழிகள், கசிவு நீர் குட்டைகள், அகழிகள், பண்ணை குட்டைகள், உறிஞ்சு குழிகள் அமைத்தல், வரத்து கால்வாய்கள், பாரம்பரிய நீர் நிலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தில் நபருக்கு ஒரு நாள் சம்பளம், 281 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் வேறுபாடின்றி, அனைவருக்கும் இந்த சம்பளம் வழங்கப்பட்டது.
அரசாணை
இந்நிலையில், மத்திய அரசு ஏப்ரல் 1 முதல், 319 ரூபாயாக சம்பளத்தை உயர்த்தியது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் ஒரு நாள் சம்பளம் 294 ரூபாயில் இருந்து, 319 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு, ஏப்., 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டத்தில் பணிபுரிவோருக்கு, புதிய சம்பளம் கணக்கிடப்பட்டு, அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ஒவ்வொருவரின் சம்பளத்தை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி அடிப்படையில் கணக்கிட்டு, அரசுக்கு அனுப்புவர். அதன்படி, அவர்கள் பணி செய்து முடித்த 15 நாட்களுக்குள், 100 சதவீதம் ஊதியத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
நடப்பாண்டு தமிழகத்திற்கு முதல் தவணையாக 1,229.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

