ஜல்ஜீவன் திட்டத்தின் செயலாக்கம்: லக்னோவில் தமிழக அதிகாரி விளக்கம்
ஜல்ஜீவன் திட்டத்தின் செயலாக்கம்: லக்னோவில் தமிழக அதிகாரி விளக்கம்
ADDED : பிப் 19, 2024 06:01 AM
சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து, லக்னோவில் நடந்த கருத்தரங்கில், தமிழக திட்ட இயக்குனர் தட்சிணாமூர்த்தி விளக்கம் அளித்தார்.
தமிழக ஊரக பகுதிகளில் உள்ள, 1.25 கோடி வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு தரும் வகையில், 18,228 கோடி ரூபாயில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2019ல் துவங்கிய இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு, 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஆனால், மற்ற மாநிலங்களிலும் இதுபோல குழாய் இணைப்பு வழங்கப்பட்டாலும், குடிநீர் வினியோகம் இன்னும் துவங்கவில்லை. தமிழகத்தின் சிறப்பான செயல்பாட்டை, மத்திய குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மஹாஜன், சமீபத்தில் பாராட்டினார்.
மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படும் என்றும் கூறினார். இத்திட்டம் தொடர்பான தேசிய கருத்தரங்கம், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், 16, 17ம் தேதிகளில் நடந்தது.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், ஜல்ஜீவன் மிஷன், தமிழக திட்ட இயக்குனர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றார். தமிழகத்தில் வெற்றிகரமாக திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட வியூகங்கள் குறித்து, அவர் விவரித்தார்.
இதை ஆர்வமுடன் கேட்ட, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பாராட்டினர். தமிழகத்தில் முன்கூட்டியே திட்டத்தை முடிக்க எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவர் விளக்கினார்.

