ADDED : ஆக 30, 2025 06:39 AM

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, 'விஜயை கூத்தாடி என விமர்சித்தால் உதயநிதியும் கூத்தாடி தான்' என பேசினார்
திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. சினிமா இயக்குனர் பேரரசு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின் அவர் நிருபர் களிடம் கூறியது: விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார்.
ஆனால் சிலர் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து கூறுகின்றனர். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவதில்லை.
அரசியல், பொது வாழ்விற்கு வந்து விட்டால் அவர்கள் அனைத்து மதத்தினருக்கும், ஜாதியினருக்கும் சமமானவர்கள். அந்தவகையில், ஹிந்து மதத்திற்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பது துரோகம்.
ஹிந்துக்கள் ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. காரணம் ஹிந்துக்கள் இடையே ஒற்றுமை இல்லை.
சிறுபான்மையினர் என்பது தவறான வார்த்தை. அனைவரையும் மக்களாக பார்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்., போன்ற செல்வாக்கு மிகுந்த நடிகரை பார்க்க முடியாது.
அவரையே கூத்தாடி என கூறினார்கள். எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வந்தவுடன் மலையாளி என கூறினார்கள். இன்று விஜய்யை கூத்தாடி எனக் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர்-., கூத்தாடி என கூறியதால் அவர் தோற்றுப் போகவில்லை.
சிவனும் கூத்தாடிதான். கூத்தாடி என்றால் அவமானமா.. உதயநிதியும் நடிகர்தான். அப்படி என்றால் அவரும் கூத்தாடிதான். துணை முதலமைச்சராக அவர் இருப்பதால் துணைக் கூத்தாடி என கூறலாமா. விஜய் கூத்தாடி என்றால், உதயநிதியும் கூத்தாடி தான்.
ஹிந்து முன்னணி அமைப்பு மட்டுமே ஹிந்துக்களுக்கு ஆதரவு. ஹிந்து மதத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். திண்டுக்கல் அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டை மேலே உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

