வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
ADDED : டிச 28, 2025 10:14 PM

சேலம்: ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று நெடுஞ்சாலை துறை பெயரை எழுதி உள்ளது. மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. இந்த வளைவுகள் மிகவும் செங்குத்தானவை. ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த கோடை விழாவின் போது சாலையை புதுப்பிக்கும் பொழுது எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு ஈவெரா பெயரை நெடுஞ்சாலை துறையினர் வைத்துவிட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வளைவில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈவெரா என்ற பெயரை அழித்து விட்டு, அதன் மீது, கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த 100 பேர் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ஒன்று திரண்டனர். பின்னர் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியிருந்த பிளக்ஸ் இன் மீது ஈ.வெ.ரா., வளைவு என்ற பிளக்ஸை ஒட்டினர். நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று இரவு நெடுஞ்சாலை துறையினர் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டிய ஈ.வெ.ரா., வளைவு என்ற பிளக்ஸ் பேனரை அகற்றிவிட்டு அந்த வளைவில் மீண்டும் தகடூர் அதியமான் வளைவு என்று எழுதினர்.
அந்த வளைவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

