'மாஜி' அமைச்சர் மீதான வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : நவ 30, 2024 02:57 AM
சென்னை:தேர்தல் அதிகாரியை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2022ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது, கரூர் பழனியப்பா நகரில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வந்த கரூர் அ.தி.மு.க., வழக்கறிஞர் மாரப்பன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட 12 பேர், தேர்தல் அதிகாரியை தடுத்து மிரட்டல் விடுத்தனர்
இச்சம்பவம் தொடர்பாக, கரூர் டவுன் போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக, வழக்கு பதிவு செய்தனர்.
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்றும், கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்ததோடு, விஜயபாஸ்கர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

