அன்னிய மரங்களை அகற்றும் பணி: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
அன்னிய மரங்களை அகற்றும் பணி: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
UPDATED : ஜன 04, 2026 06:24 AM
ADDED : ஜன 04, 2026 04:06 AM

சென்னை: வெளிநாட்டு மரங்களை அகற்ற மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்ததுடன், தொடர் பராமரிப்புக்கு உடனே நிதி விடுவிக்க வேண்டும் என, அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதி பதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, 'சீமை கருவேலம் மற்றும் அன்னிய மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில், அவை மீண்டும் வளரவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு தொடர் பராமரிப்புக்கான நிதியை மாநில அரசு விடுவிக்க வேண்டும்.
'பராமரிப்பு சரிவர நடக்கவில்லை எனில், அப்பகுதியில் மீண்டும் அன்னிய மரங்கள் வளர்ந்துவிடும்' என, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
அதற்கு, அன்னிய மரங்களை அகற்ற மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், 'இந்த பணிகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.இருப்பினும், தொடர் பராமரிப்புக்கு உரிய நிதியை வழங்காவிட்டால், மாநில அரசு இதுவரை எடுத்த முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்படும்.
'எனவே, பராமரிப்பு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசின் வனத்துறை சிறப்பு பிளீடரிடம் அறிவுறுத்தினர்.

