திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழா ஆடு, கோழி பலியிட தடை விதித்தது ஐகோர்ட்
திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழா ஆடு, கோழி பலியிட தடை விதித்தது ஐகோர்ட்
ADDED : ஜன 03, 2026 03:15 AM

மதுரை: 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாணிக்கமூர்த்தி தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு புனிதமான இடமாகும். மலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமானது. மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. மலையில் தர்கா நிர்வாகம் ஆடு, கோழி பலியிடக்கூடாது. அசைவ உணவு பரிமாறக்கூடாது. அது வழக்கம் என கருதினால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யவில்லை. சிவில் நீதிமன்றத்தை அணுகவில்லை.
டிச., 21 முதல் ஜன., 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடுவிழாவை தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதியாகும். கந்துாரி நடத்த அனுமதி அளித்தது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.
மலை மீது முருகனின் தலவிருட்சமான கல்லத்தி மரம் உள்ளது. அதில் நிலா பிறை பொறித்த கொடி கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டும். மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன்: தற்போதைய திருவிழா உரிமை பிரச்னை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே சார்ந்தது. ஜன., 6 ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2023 ல் அனுமதி வழங்கப்பட்டது. அதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். கந்துாரி மகா உற்ஸவத்திற்கு அனுமதி வழங்கப்படாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படும்.
விலங்கு பலியிடுதல், இறைச்சியை எடுத்துச் செல்லுதல், அசைவ உணவு தயாரித்தல் மற்றும் எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது.
தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன்: ஏற்கனவே இதுபோன்ற நிவாரணம் கோரி தாக்கலான வழக்கில் இந்நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மீண்டும் அதே நிவாரணம் கோரி தற்போது 2வது முறையாக தாக்கல் செய்த இம்மனு ஏற்புடையதல்ல. மலையில் கந்துாரி விழா நடத்தக்கூடாது. தரைப்பகுதியில் கந்துாரி நடத்தலாம். கந்துாரி என்ற வார்த்தைக்கு தடையில்லை.
நீதிபதி: ஏற்கனவே இரு தரப்பின் உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாஞ்சிநாதன்: பாகிஸ்தான் கொடியை தர்கா நிர்வாகம் ஏற்றுகிறது. இறந்தவர்களின் உடல் மலை உச்சியில் புதைக்கப்படுகிறது என தவறான தகவலை அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு எங்களைத்தான் ஒடுக்குகிறது. தர்காவிற்கு சொந்தமான இடத்தில்தான் கொடியேற்றப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. விலங்கு இறைச்சியை எடுத்துச் செல்லக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்லக்கூடாது. இந்த உத்தரவை மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற முழு அமர்வு மற்றும் பல்வேறு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கை போலீசார் கண்டிப்புடன் நிலைநாட்ட வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜன., 20ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

