UPDATED : ஜூலை 31, 2025 07:03 AM
ADDED : ஜூலை 31, 2025 06:47 AM

சென்னை: 'தமிழகத்தில், ஐந்து மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், நாளை மறுநாள் முதல், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக., 5 வரை, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.,3 முதல் 5 வரை, திருவள்ளூர் முதல் தஞ்சாவூர் வரை, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், சில இடங்களில், இன்று பகல் நேரத்தில், அதிகபட்ச வெப்பம் இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. இதனால், பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில், இன்று அதிகபட்சமாக, மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

