கார் ஓட்டும்போது மாரடைப்பு; ஓரமாக நிறுத்தி உயிர் துறந்த டிரைவர்
கார் ஓட்டும்போது மாரடைப்பு; ஓரமாக நிறுத்தி உயிர் துறந்த டிரைவர்
ADDED : செப் 29, 2024 11:51 PM
நாகர்கோவில் : கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த டிரைவர் இடது இண்டிகேட்டரை போட்டு ரோட்டோரம் காரை நிறுத்தி உயிர் துறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேட்டுக் கடையை சேர்ந்தவர் ஜான்சன் 61. துபாயில் டிரைவராக பணியாற்றி தற்போது ஊருக்கு வந்தார். ஆக்டிங் டிரைவராக பணியாற்றினார். தக்கலை டாக்டர் குடும்பத்தினர் திருநெல்வேலி செல்வதற்கு ஜான்சனை டிரைவராக அழைத்தனர்.
நேற்று காலை டாக்டர் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு புறப்பட்டார். நாகர்கோவில் --- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே விசுவாசபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்ந்த ஜான்சன் உடனடியாக இடது இண்டிகேட்டரை போட்டு ரோட்டோரம் காரை நிறுத்தினார். பின்னர் அப்படியே சாய்ந்து விட்டார்.
காரில் இருந்த டாக்டர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தனக்கு ஏற்பட்ட மாரடைப்பை உணராமல் ஜான்சன் காரை ஓட்டியிருந்தால் பெரும்விபத்து ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்த டாக்டர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

