ADDED : ஆக 20, 2024 07:36 AM

மதுரை: விதவிதமான மோசடிகள் நடந்து வரும் நிலையில் மதுரையில் நேற்று புதுவித மோசடி முயற்சி அரங்கேறியது. வியாபாரிகள் உஷாராக இல்லாவிட்டால் மொத்தத்தையும் 'சுருட்டி' விடுவார்கள்... ஜாக்கிரதை.
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டயர் விற்பனை ேஷாரூமிற்கு நேற்று கொஞ்சும் தமிழில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அலைபேசியில் தொடர்புகொண்டார். 'வண்டி டயர் மாற்ற எவ்வளவு ஆகும்' என விசாரித்தவர், அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்துவதாக கூறினார். சுதாரித்துக்கொண்ட கடை ஊழியர், வங்கி கணக்கு இணைக்கப்படாத கியூ.ஆர். கோடு ஒன்றை அந்த நபருக்கு அனுப்பினார்.
சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டது போல் அவருக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது. சில நிமிடங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், 'ஒரு ரூபாய் வந்துவிட்டதா' என கேட்டார். 'வந்துவிட்டது' என ஊழியர் கூற, 'டயர் கட்டணம் ரூ.15200 அனுப்புகிறேன்' என்றார். ஆனால் ரூ.20,200 வரவு வைக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்தது.
சில நிமிடங்களில் அந்த நபர், கடை ஊழியரை தொடர்பு கொண்டு, 'கூடுதலாக ரூ.5 ஆயிரத்தை அனுப்பிவிட்டேன். திருப்பி அனுப்ப முடியுமா' எனக்கேட்டார். தனது கியூ.ஆர். கோடு ஒன்றையும் அனுப்பினார். சுதாரித்துக்கொண்ட ஊழியர் கடைசி வரை அந்த நபருக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
போலீசார் கூறியதாவது: எஸ்.எம்.எஸ்., லிங்க் அனுப்பி அதன் மூலம் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது போல், கூடுதல் தொகை அனுப்பிவிட்டதாக கூறி கியூ.ஆர். கோடு அனுப்புகின்றனர்.
அதை ஸ்கேன் செய்யும்போது ஜி பே அல்லது போன் பே மூலமாக வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் கணக்கிற்கு பணம் செல்லும்.
அதை பயன்படுத்தி மொத்த பணத்தையும் மோசடி நபர் சுருட்டி விடுவார். இதுபோல் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

