பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
UPDATED : செப் 12, 2025 02:07 PM
ADDED : செப் 12, 2025 10:32 AM

பிரசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாராவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ அதிர்ச்சி தோல்வியடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடு தான் தன்னுடைய தோல்விக்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போல்சனாரோ, அர்ஜென்டினாவுக்கு தப்பியோட முயற்சித்தார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்தத் தீர்ப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், 'போல்சனாரோ சிறந்த மனிதர். இந்தத் தீர்ப்பு என்னை வருத்தமடையச் செய்துள்ளது,' என்றார்.