ரயிலில் சிக்கி யானைகள் இறப்பது தடுப்பு: ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் சாதித்த வனத்துறை
ரயிலில் சிக்கி யானைகள் இறப்பது தடுப்பு: ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் சாதித்த வனத்துறை
UPDATED : மார் 21, 2025 04:55 AM
ADDED : மார் 21, 2025 12:39 AM

சென்னை: 'கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு அறை உதவியால், ரயிலில் யானைகள் சிக்கி இறப்பது கடந்த ஓராண்டில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ரயில்கள், கோவை மதுக்கரை வழித்தடத்தில் செல்கின்றன. இங்கு அடர்ந்த வனப்பகுதி நடுவே ரயில் பாதை உள்ளது.
அப்பகுதியில் தண்ணீர் தேடி வரும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் சிக்கி இறப்பது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது.
கடந்த 2017 முதல், 2021 வரையிலான ஐந்தாண்டுகளில், 79 யானைகள் ரயில்கள் மோதி இறந்தன; 2022ல் மட்டும், 14 யானைகள் இறந்தன.
உத்தரவு
இந்த வழித்தடத்தில், ஆண்டுக்கு சராசரியாக, 16 யானைகள் இறப்பது வழக்கமாக இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, யானைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, வனத்துறைக்கும், ரயில்வே துறைக்கும் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது.
இதன் மேற்பார்வையில், 12 உயர் கோபுரங்கள் அமைத்து, நவீன தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இப்பணிகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த வழித்தடத்தில், இரண்டு இடங்களில், ரயில் பாதையில் குறுக்கிடாமல் யானைகள் செல்ல, சுரங்க வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. இந்த முயற்சிக்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது.
எச்சரிக்கை
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மதுக்கரை வழித்தடத்தில், செயற்கை நுண்ணறிவு கருவிகள் வாயிலாக, கடந்த ஓராண்டில், 5,011 முறை யானைகள் நடமாட்டம் குறித்த எச்சரிக்கை தகவல்கள் பெறப்பட்டன. அவை, ரயில் டிரைவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டன. தகவல் கிடைத்ததும், டிரைவர்கள் ரயிலின் வேகத்தை குறைத்து, தொடர்ந்து ஒலி எழுப்பியபடி ரயிலை இயக்குவர்.
இந்த வழித்தடத்தில் கடந்த ஓராண்டில், 2,500 முறை யானைகள் ரயில் பாதையை கடந்துள்ளன. அதில், ஒரு விபத்து கூட நடக்காமல் தடுக்கப்பட்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நடவடிக்கையால், இது சாத்தியமாகி உள்ளது. விலங்கு - மனித மோதல் ஏற்படும் பிற இடங்களிலும், இந்த வழிமுறையை கடைப்பிடிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

