ADDED : நவ 19, 2024 07:29 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பா.ஜ., ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா மூலவரை தரிசித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
புதுடில்லியில் மாசு அதிகரித்துள்ளது. அதனால், பல தீங்குகள் ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முழு முதல் காரணம் டில்லி அரசாங்கத்தின் மோசமான செயல்பாடுதான்.
தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, தன்னுடைய பெயரை பொய் மொழி என மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. அந்த அளவுக்கு பொய் பேசுகிறார். அவர் சொல்லும் அனைத்துத் தகவல்களுமே பொய். இப்படித்தான் மற்ற அமைச்சர்களும் உள்ளனர். மொத்தத்தில், தி.மு.க., அமைச்சர்கள் ஒருவருக்குக்கூட நிர்வாகம் செய்ய தெரிவில்லை.
தமிழகத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை ஆணையர் தலைமையின் கீழ் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கூட்டம் நடத்தவில்லை. அது ஏன்?
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிதியை, தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நடக்கிறது. 14 ஆவது நிதி குழு பரிந்துரையின் பேரில் 32 சதவீதம் வெர்டிக்கல் நிதி பகிர்மானத்தை, 42 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
அரசின் நல திட்டங்களுக்கு, கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு பதிலாக சுதந்திரப் போராட்டத்திற்கும் தமிழுக்கும் போராடிய தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

