'திறந்தவெளி ஒதுக்கீட்டை கணக்கிட சாலைக்கான நிலத்தை சேர்க்காதீங்க'
'திறந்தவெளி ஒதுக்கீட்டை கணக்கிட சாலைக்கான நிலத்தை சேர்க்காதீங்க'
ADDED : செப் 27, 2024 01:51 AM
சென்னை:தமிழகத்தில் மனைப்பிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் 10 சதவீத நிலத்தை, ஓ.எஸ்.ஆர்., என்ற பெயரில் பூங்கா மற்றும் விளையாட்டு பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும்.
ஒரு திட்டத்தின் மொத்த பரப்பளவு, 32,291 சதுர அடிக்கு மேல் செல்லும்போது, அதில் ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டுக்காக, நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இதில், 32,291 சதுர அடிக்கு மேல், 1.07 லட்சம் சதுர அடி வரையிலான திட்டங்களில், ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீடாக நிலத்தை விடுவதற்கு பதில், அதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.
அதற்கு மேற்பட்ட பரப்பளவுள்ள திட்டங்களை செயல்படுத்தும்போது, அதன் மொத்த பரப்பளவில், 10 சதவீத நிலத்தை ஓ.எஸ்.ஆர்., பயன்பாட்டுக்கு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்க வேண்டியது கட்டாயம்.
இந்த வரம்புக்குக் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில், ஓ.எஸ்.ஆர்., நிலத்தின் பரப்பளவுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படும். அந்த பகுதியில் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், இந்த கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
இதில், திட்டப்பகுதியின் மொத்த பரப்பளவையும், அதில், 10 சதவீத ஓ.எஸ்.ஆர்., பாகத்தையும் கணக்கிடும்போது, அதிகாரிகள் நிலையில் சில தவறுகள் நடக்கின்றன.
குறிப்பாக, அந்த குறிப்பிட்ட திட்டத்துக்கான மொத்த பரப்பளவில், சாலைகளுக்காக ஒதுக்கப்படும், 10 சதவீத நிலத்தை விடுத்து, எஞ்சிய நிலத்தின் மொத்த பரப்பளவில்தான், 10 சதவீத ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டை கணக்கிட வேண்டும் என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2023ல் உத்தரவிட்டது.
அதன்பின்னும் பெரும்பாலான பகுதிகளில், சாலைக்கான நிலத்தையும் சேர்த்து, அதில், 10 சதவீத ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டை திட்ட அதிகாரிகள் கணக்கிடுவதாக தெரியவந்துள்ளது.
எனவே, ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டை கணக்கிடும்போது, அதில் சாலைக்கான நிலத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என நகர், ஊரமைப்பு துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
சிறிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், 1.07 லட்சம் சதுர அடிக்குள் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, ஓ.எஸ்.ஆர்., கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது.

