ADDED : மே 06, 2026 05:22 AM

சென்னை : ''தி.மு.க., பார்க்காத வெற்றி கிடையாது; பார்க்காத தோல்வி கிடையாது. கட்சிக்கு சுயபரிசோதனை தேவை,'' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், அவர் அளித்த பேட்டி: சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக என்னை தேர்வு செய்வது குறித்து, கட்சி தலைவர் முடிவு செய்வார். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன்படி தான் நான் செயல்படுவேன். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில், எனக்கு மக்கள் வெற்றி வாய்ப்பு அளித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்குரியவராக செயல்படுவேன்.
தேர்தலில் தி.மு.க., பார்க்காத வெற்றி கிடையாது; தி.மு.க., பார்க்காத தோல்வி கிடையாது. கட்சிக்கு எப்போதுமே சுயபரிசோதனை தேவை. மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் கடமையை மக்களுக்கு செய்வோம்.
இந்த முறை இளைஞர்களுக்கு அதிகமாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நிறைய பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பெரியகருப்பன், நீதிமன்றத்திற்கு செல்ல ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
