ADDED : டிச 23, 2024 06:20 AM

திருச்சி: ''தி.மு.க., தான் என் எதிரி; ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் என் தம்பி,'' என, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சியில் அவரது கட்சி சார்பில், 'அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு' என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பித் தர முடியாது என்று அறநிலையத்துறை கூறுவது, எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்டியலில் வெடிகுண்டை போட்டிருந்தால் என்ன செய்திருப்பர்?
நடிகர் விஜய்க்கும், எனக்கும் ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. தி.மு.க., தான் என் எதிரி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே நாங்கள் பாட்சாவுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார்.
அவர் யாருடைய ஓட்டை பெற கோவையில் பேரணி நடத்தினார்?
முஸ்லிம்கள் ஒரு போதும் எனக்கு ஓட்டு போட்டதில்லை. அவர்கள் ஓட்டு போடுவர் என்பதற்காக, நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன் பிறந்தவர்கள் என்ற எண்ணத்திலேயே, அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன்.
அவர்களுடைய ஐந்து கடமைகளில், ஆறாவது கடமையாக தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதை தீர்மானமாக வைத்துள்ளனர். அவர்களின் இறைதுாதரே வந்து சொன்னால் கூட, அவர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதை விடமாட்டார்கள்.
ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம்; தனித்து போட்டியிடுவோம். தி.மு.க., சார்பில் அங்கு இடைத்தேர்தலில் பணியாற்றக்கூடிய செந்தில் பாலாஜியை பார்த்து, நாங்கள் பயப்பட அவர் என்ன ஆரியப்படை வீரரா?
பணம் கொடுத்தால் தான், தி.மு.க.,வினர் தேர்தல் வேலை செய்வர். அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் அவரை பார்த்து பயப்பட வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.

