பதவியில் நீடிக்க தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அன்புமணி
பதவியில் நீடிக்க தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அன்புமணி
ADDED : நவ 21, 2024 11:52 AM

சென்னை: 'கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
அவரது அறிக்கை: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
போதைப்பழக்கம்
13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை.
நடவடிக்கை
சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை.
பொறுமை
தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள். அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக தி.மு.க.,வினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அன்புமணி கூறினார்.

