மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., அரசு: இபிஎஸ்
மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., அரசு: இபிஎஸ்
ADDED : செப் 12, 2025 05:55 AM

உடுமலை: ''மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் இபிஎஸ் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு அவர் மேலும் பேசியதாவது:
'இண்டி' கூட்டணி நாட்டுக்கு நல்லது செய்யும் என கூறும் ஸ்டாலின், கேரளாவிலுள்ள கம்யூ., அரசுடன் பேச்சு நடத்தி, ஆனைமலையாறு-நல்லாறு அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால், விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, 6,௦௦௦ பொதுப்பணித்துறை, 26,௦௦௦ உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான குளம், குட்டைகள் துார்வாரப்பட்டு, மழை நீர் சேமிக்கப்பட்டது.
மறு புறம் விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டு, விளை நிலங்களும் வளமாகின. இத்திட்டத்தையும் தி.மு.க., அரசு முடக்கியது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குளம் குட்டைகள் மற்றும் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும்.
தமிழகத்தில் மின் கட்டணம் 67 சதவீதமும், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் 100 சதவீதமும் உயர்ந்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சி அமைத்ததும், மூன்று ஆண்டாக மூடப்பட்டுள்ள அமராவதி சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கவும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.