ADDED : மே 04, 2025 03:38 AM
சென்னை: தி.மு.க., பொதுக்குழு கூட்டம், அடுத்த மாதம் 1ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ளது.
இது தொடர்பாக, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
அரசியலில் தவிர்க்க முடியாத தேசிய சக்தியாக தி.மு.க., திகழ்கிறது. அகில இந்திய அரசியலில் இன்று, முதல்வர் ஸ்டாலினின் கருத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஓங்கி நிற்கிறது.
தி.மு.க.,வின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம், ஜூன் 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில், மதுரை, உத்தங்குடி கருணாநிதி திடலில் நடக்கவுள்ளது. கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கை குழு அறிக்கை குறித்து, அதில் விவாதிக்கப்படும்.
உயர்கல்வி சேர்க்கை விகிதம் உயர்வு, காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட, தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதற்காக, 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில், 'நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு' என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இதில், 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட, 443 பேர் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

