UPDATED : டிச 23, 2025 05:57 AM
ADDED : டிச 23, 2025 05:54 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் பக்தர்கள் செல்ல 20 நாட்களுக்குப் பின் போலீசார் நேற்று அனுமதி அளித்தனர். சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்களை மலைமேல் செல்ல அனுமதிப்பதற்காக, தற்போது அனுமதிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், தீபம் ஏற்றப்படாத பிரச்னையில் 20 நாட்களாக, திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூடுதலாக ஆயிரம் போலீசார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மலைமேல் செல்லக்கூடிய பெரிய ரத வீதி, பழநி ஆண்டவர் கோயில் சந்திப்பு, மலை படிக்கட்டுகளுக்கு முன்பு, பழநி ஆண்டவர் கோயில் அருகே என பல இடங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு பகுதிகளில் இருநுாற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்கு செல்வதற்குகூட போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
டிச., 2 முதல் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. டிச.,3ல் 144 தடை உத்தரவு அமலானது.
சில தினங்களுக்கு முன் மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவிற்காக முன்னேற்பாடுகள் செய்ய, நான்கு இஸ்லாமியர்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்கா நிர்வாகிகள் சந்தனக்கூடு விழாவிற்காக, மலை மேல் கொடியை கொண்டு சென்றனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை மலை மேல் செல்ல அனுமதித்துள்ளீர்கள், எங்களையும் தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் 20 நாட்களுக்கு பின்பு, நேற்று மதியம் 1:10 மணிமுதல் அனைவரும் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இரும்பு தடுப்புகளை அகற்றினர் பக்தர்கள் கூறியதாவது: 20 நாட்களாக யாரையும் மலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
மெயின் ரோட்டில் இருந்து எங்கள் வீட்டுகளுக்கு வருவதற்கு கூட போலீசார் மிகுந்த சிரமப்படுத்தினர். நேற்று முன்தினம் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டது. ஜன.,6 அன்று சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. அதுவரை இஸ்லாமியர்கள் மலை மேல் தர்காவிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது அனைவரும் மலைக்குச் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர். சந்தனக்கூடு திருவிழா இல்லையென்றால் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
இந்த அனுமதி ஜன.,7க்கு பின்பும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றனர்.

