வழிகாட்டி மதிப்புகளில் முரண்பாடு தேங்கும் புகார்களை விசாரிப்பதில் தாமதம்
வழிகாட்டி மதிப்புகளில் முரண்பாடு தேங்கும் புகார்களை விசாரிப்பதில் தாமதம்
ADDED : நவ 02, 2024 12:15 AM
சென்னை:உரிய நடைமுறைகள் இல்லாததால், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகள் தொடர்பான புகார்கள், தேக்கமடைவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில், 'சர்வே' எண் வாரியாக நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில், இந்த மதிப்பு கள் திருத்தி அமைக்கப்படுகின்றன.
விவசாய நிலம், வணிக பகுதி, குடியிருப்பு பகுதி, தொழில் பகுதி என, பல்வேறு வகைப்பாடுகள் அடிப்படையில் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்தந்த சார் - பதிவாளர் அலுவலகம் வாயிலாக, இதற்கான விபரங்கள் திரட்டப்படுகின்றன.
இதில் பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலக ஊழியர்கள், தங்களிடம் ஏற்கனவே உள்ள புள்ளி விபரங்களை, அப்போதைய தேவைக்கு ஏற்ப சிறிய மாற்றம் செய்து அனுப்புகின்றனர். இதில் பல இடங்களில், மனையாக பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கு, விவசாய நில மதிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரச்னை
இதேபோன்று, விவசாய நிலமாக உள்ள சர்வே எண்களுக்கு, மனைக்கான மதிப்பு குறிப்பிடப்பட்டு உள்ளது. சொத்து வாங்குவது, வங்கியில் கடன் வாங்குவது, நிலம் கையகப்படுத்துதல் போன்ற சமயங்களில், இந்த மதிப்பு முரண்பாடுகளால், பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சில இடங்களில், அரசு நிலங்களின் வழிகாட்டி மதிப்புகள் நீக்கப்படாமல் உள்ளன. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் புகார் அளித்தாலும், முறையாக விசாரிப்பது இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வழிகாட்டி மதிப்புக்கான புள்ளி விபரங்களை சேகரிக்க, தனி பணியாளர்கள் இல்லை. சார் - பதிவாளர் அலுவலக பணியாளர்கள், தங்கள் வழக்கமான பணிகளுடன், இந்த விபரங்களையும் தொகுக்கின்றனர். இதில், சில இடங்களில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக புகார்கள் அளித்தால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், பொது மக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. யார், எப்போது, எப்படி விசாரித்து முடிக்க வேண்டும் என்பதற்கான நடைமுறைகள் இல்லை.
பரிந்துரை
இதனால், புகார்களை அதிகாரிகள் வாங்கி வைக்கின்றனர்; விசாரணை நடப்பது இல்லை. பத்திரப்பதிவில் மதிப்பு பிரச்னையால் மேல்முறையீட்டு வழக்குகள் அதிகரிக்கின்றன. மேலும் சில இடங்களில் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, அரசு நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கும் ஏதுவாக அமைகிறது.
எனவே இதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என, மேலதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

