'சஸ்பெண்ட்' ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடம் சி.பி.சி.ஐ.டி.,- எஸ்.பி., விசாரணை
'சஸ்பெண்ட்' ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடம் சி.பி.சி.ஐ.டி.,- எஸ்.பி., விசாரணை
ADDED : ஜூலை 25, 2025 01:12 AM

சென்னை:காதல் ஜோடியை பிரிக்க, 17 வயது சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக, 'சஸ்பெண்ட்' கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமிடம், சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,ஜவஹர் விசாரித்து, வாக்குமூலம் பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் காதலித்து, பதிவு திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களை பிரிக்க, விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ் முயன்றார்.
அவருக்கு, பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் மகேஸ்வரி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயராம், ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர்.
இதன் காரணமாக, மகேஸ்வரி, வனராஜ் மற்றும் அவரது உறவினர்கள், தனுஷ் தம்பியான, 17 வயது சிறுவனை கடத்தினர்.
இது தொடர்பாக, திருவாலாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். சிறுவன் கடத்தல் தொடர்பாக, ஜெயராம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று, ஜெயராம் ஆஜரானார். அவரிடம், வடக்கு மண்டல சி.பி.சி.ஐ.டி., -- எஸ்.பி., ஜவஹர் விசாரணை நடத்தினார்.
அப்போது, 'சிறுவனை கடத்த, அரசு வாகனத்தை கொடுத்தது ஏன், சிறுவன் கடத்தப்பட்ட நாளில் மகேஸ்வரி உங்களை அடிக்கடி தொடர்பு கொண்டது ஏன்' என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் பெற்று, அதை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார்.

