'டாஸ்மாக்' கடைகளில் 'ஜில்' பீர் எக்ஸ்ட்ரா ரூ.50 கேட்பதாக புகார்
'டாஸ்மாக்' கடைகளில் 'ஜில்' பீர் எக்ஸ்ட்ரா ரூ.50 கேட்பதாக புகார்
ADDED : மார் 19, 2024 04:02 AM

சென்னை : தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 கடை கள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 60,000 பெட்டி பீர் மற்றும், 1.80 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. ஒரு பீர் பெட்டியில், 12 பாட்டில்கள்; மதுபான பெட்டியில், 48 'குவார்ட்டர்' பாட்டில்களும் உள்ளன.
கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனவே, 'குடி'மகன்கள் பலரும் வெப்பத்தை தணிக்க, குளிர்ச்சியான பீர் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் தற்போது தினசரி பீர் விற்பனை, ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டி, 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி, மதுக்கடை ஊழியர்கள் குளிர்ச்சியான பீர் வழங்க, 'குடி'மகன்களிடம் பாட்டிலுக்கு, 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'குடி'மகன்கள் கூறியதாவது:
பீர் குளிர்ச்சியாக தான் குடிக்க முடியும். வழக்கமாக, ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பர்; தற்போது, பீருக்கு தேவை அதிகரித்துள்ளதால், பலரும் அதை வாங்குகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி குளிர்ச்சியான பீர் வழங்க, 50 ரூபாய் கூடுதலாக கேட்கின்றனர். அதை தர மறுத்தால், குளிர்ச்சி இல்லாத பீர் வழங்குகின்றனர்.
இதுகுறித்து, ஊழியர்களிடம் கேட்டால், 'மது கடைக்கான மின் கட்டண செலவு மற்றும், குளிர்ப்பதன பெட்டி பராமரிப்பு செலவை நாங்கள் தான் செய்கிறோம்; அவற்றுக்கு, நிர்வாகம் பணம் தருவதில்லை; அதற்காக தான் உங்களிடம் வசூலிக்கிறோம்' என்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊழியர்களிடம் கேட்ட போது, 'ஒரு பாட்டிலுக்கு, 50 ரூபாய் அளவுக்கு எல்லாம், கூடுதல் பணம் வசூலிப்பதில்லை; 'குடி'மகன்கள் விரும்பி தருவதை வாங்குகிறோம்' என்றனர்.

