ADDED : பிப் 20, 2024 01:44 AM

சென்னை:லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, விருப்ப மனு வினியோகம், சென்னை அறிவாலயத்தில் நேற்று துவங்கியது.
அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலர் அன்பகம் கலை, துணை செயலர் ஆஸ்டின் ஆகியோர் விருப்ப மனு வினியோக பணியில் ஈடுபட்டனர்.
முதல் நாளான நேற்று விருப்ப மனுக்களை, தலா 2,000 ரூபாய் செலுத்தி வாங்கி சென்றனர்.
மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும் போது, 50,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1 முதல், 7ம் தேதி வரைக்குள், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுப்பவர்கள் மட்டுமே நேர்காணலில் பங்கு பெற முடியும்.
இந்நிலையில் நேற்று, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர் உட்பட 32 நிர்வாகிகள், துாத்துக்குடியில் கனிமொழி போட்டியிட, அவரது பெயரில் விருப்ப மனுக்களை வாங்கினர்.
திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.,வினரும், 60க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

