மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஜூலை 26, 2025 10:33 PM
சென்னை:கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக வனத்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:
கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டி உள்ளது. இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அது மட்டுமின்றி, விலங்குகள்- - மனித மோதல்களும் அதிகரிக்கும்.
மேலும், முருகன் சிலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால், முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும்.
அதேபோல, மற்றொரு யானைகள் வழித்தடமான ஆனைகட்டியில் உள்ள சட்டவிரோத 'ரிசார்ட்'களை மூட உத்தரவிட வேண்டும். கோவை -- ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில், இரவு நேரம் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, வனத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

