தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான் காட்டம்
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான் காட்டம்
UPDATED : டிச 31, 2025 08:00 PM
ADDED : டிச 31, 2025 07:31 PM

மதுரை : ''தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது,'' என மதுரையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் வழிகாட்டுதல்படி, கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கை. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்' என்ற நீதிபதியின் தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக, இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரை சந்தித்த பூரணசந்திரன் குடும்பம்
மதுரை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்தார். பூர்ணசந்திரனின் தந்தையும், சகோதரனும் அமைச்சரிடம், ''பூரணசந்திரன் விருப்பப்படி, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்,'' என கேட்டுக் கொண்டனர். பூரண சந்திரனின் மனைவி இந்துமதி சார்பில் மனுவையும் அமைச்சரிடம் வழங்கினர்.
நிதியை முதல்ல விடுவிங்க
தமிழக பிள்ளைகளுக்கு சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ., அரசு ஆர்வம் காட்டுகிறது. இதைத்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரையில் தன் கருத்தாக வெளிப்படுத்தி உள்ளார். முதல்ல நிதியை விடுவிச்சுட்டு, மற்றதை பேசுங்க.கனிமொழி, எம்.பி., - தி.மு.க.,

