கருப்பு ஆடையால் திமுகவின் தீய எண்ணத்தை மறைக்க முடியாது; பிரதமர் மோடி
கருப்பு ஆடையால் திமுகவின் தீய எண்ணத்தை மறைக்க முடியாது; பிரதமர் மோடி
UPDATED : ஏப் 18, 2026 10:28 PM
ADDED : ஏப் 18, 2026 07:33 PM

கோவை: கருப்பு ஆடையால் திமுகவின் தீய எண்ணத்தை மறைக்க முடியாது.உங்களது கெட்ட செயல்களின் பலன்களில் இருந்து உங்களால் தப்பவே முடியாது. என பிரதமர் மோடி கூறினார்.
தேஜ வெற்றி
கோவையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கோனியம்மன், மருதமலை முருகனுக்கு எனது பிரார்த்தனைகளை காணிக்கையாக்குகிறேன். கடந்த 14ம் தேதி உலகம் முழுதும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். அப்போது அனைவரும் உடல்நலன் பெற்று, அனைத்தும் கிடைத்து வளர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்.
புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை, சக்தியை கொண்டாடுகிறது. அன்றைய தினம் முதல் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தேஜ கூட்டணி உள்ளே வரப்போகிறது. திமுக வெளியேறப்போகிறது என்ற தெளிவான செய்தியை தமிழக மக்கள் அனுப்பி உள்ளனர்.
ஆதங்கமும் வருத்தமும்
கோவை கடும் உழைப்பாளிகளுக்கும் பாசமான மக்களுக்கும் சொந்தமான நிலம். வளர்ச்சி அரசியலுக்கு பக்கபலமாக தேஜ கூட்டணிக்கு உற்றதோழனாக எப்போதும் இருந்து வந்துள்ளீர்கள். நான் இங்கு எப்போதும் வந்தாலும் உங்களில் ஒருவனாக உணர்கிறேன்.
அம்பலம்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த முயற்சி தோல்வி அடைந்தது. திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கீழ்த்தரமான அரசியலுக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இரையாக்கினார்கள். இந்த மசோதா சட்டம் ஆகியிருந்தால், சாதாரண குடும்பங்களை சேர்ந்த பெண்கள் எம்பிக்கள், எம்எல்ஏ ஆக ஆகியிருப்பார்கள்.
தமிழகத்திற்கு அதிக எம்பி தொகுதிகள் கிடைப்பதாக இருந்தது. ஆனால், இதனை திமுக விரும்பவில்லை. திமுகவின் செயல் அம்பலமாகிவிட்டது. அதன் குட்டு வெளிப்பட்டு விட்டது. கருப்பு உடை அணிந்து தனது தீய எண்ணங்களுக்கு திமுக திரைபோட முடியாது. உங்களது கெட்ட செயல்களின் பலன்களில் இருந்து உங்களால் தப்பவே முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகங்களை தெரிந்து கொண்டுள்ளனர். பொய் பேசும் திமுகவால் பொய் புரட்டுகளை மறைக்க முடியாது.
இது எங்களின் போராட்டத்தின் முடிவு அல்ல. துவக்கம்தான். பாஜவும், தேஜ கூட்டணியும் பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவார்கள். இது எனது உறுதிப்பாடு.
பொய்
திமுகவிடம் எந்த சாதனையும் இல்லை. குற்றம் சொல்ல எந்த பிரச்னையும் இல்லை. இதனால் தான் தொகுதி மறுவரையறை குறித்து பொய் பரப்ப துவங்கி உள்ளனர். தற்போது உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் நீடிக்க வேண்டும் என திமுக கூறியது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. அப்போது ஒன்றை கூறினர். தற்போது வேறு ஒன்றை கூறினர். சாதாரண பெண்கள் அதிகாரம் பெற்றால் திமுக, காங்கிரசுக்கு ஏன் எரிகிறது. ஒற்றை குடும்ப கட்சிகள், அதிகாரம் தங்களது குடும்பத்திற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என அக்கட்சிகள் விரும்புகின்றன.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. வன்முறை குற்றங்களுக்கு திமுக ஆதரவாக இருந்து பெண்களுக்கு தீங்கு இழைக்கிறது. பார்லிமென்டிலும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது இல்லை. பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு சரியான பதில் திமுகவிற்கு கிடைக்கும்.
இரண்டு விஷயங்கள்
இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான இன்ஜினாக தமிழகம் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 14 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது. இது நெடுஞ்சாலைகள், ரயில்வேத்துறை, நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அளிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையை விட இது மிக அதிகம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் இரண்டு விஷயங்கள் சாதனை அளவை எட்டி உள்ளது. முதலில் ஒரு குடும்பத்தின் சொத்து, தமிழகத்தின் கடன் வரலாறு சாதனை படைத்துள்ளது.
போட்டி
தமிழகத்தின் அதிகாரத்தில் இருக்கும் குடும்பத்தின் சொத்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் கடனும் உயர்கிறது.
குடும்பத்திற்கு, குடும்பத்தால், குடும்பத்திற்காக இதுவே திமுகவின் கொள்கை. முதல்வர் அதே குடும்பம், துணை முதல்வர் அதே குடும்பம். டில்லியில் இருக்கும் முக்கிய எம்பிக்கள் அதே குடும்பம்.
திரைப்படங்கள், ஊடகங்கள் என பலதுறைகளை ஒரே குடும்பம் தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. திமுகவின் மூத்த தலைவர்கள் கூட ஒரு குடும்பத்தின் இளைய உறுப்பினர்களிடம் தலை தாழ்த்த வேண்டி உள்ளது.
திமுகவிலும், காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்தியா ஒரு மகனால், மருமகனால் சலித்துவிட்டது. இன்னொரு மருமகனால் தமிழகம் சலித்து போய்விட்டது. இரண்டு குடும்பங்களால், மக்கள் வேதனையில் உள்ளனர்.
பெருமை
அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல், நேர்மை , கடுமையான உழைப்பில் உயர்ந்தவர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன். கயிறு வாரிய தலைவராக இருந்தபோது ஏற்றுமதியை சாதனை அளவுக்கு உயர்த்தியவர். இந்த மண்ணின் மைந்தன் இப்போது துணை ஜனாதிபதியாக உள்ளார். அவரால் நமது நாட்டுக்கு பெருமை.
பழிவாங்கல்
திமுகவின் ஊழல் மலிந்த ரவுடியிச அரசியலை கோவை மக்கள் எப்போதும் புறக்கணித்து வந்துள்ளனர். இதனால், இப்பகுதியை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக அணுகி வந்துள்ளது. திமுக உயரிய தலைவர் ஒருவர் கோவை மக்களை எப்படி அவமானப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டவரை கோவைக்கு அனுப்பி உள்ளனர்.
பலன்கள்
டபுள் இன்ஜின் அரசு இருக்கும் போது பணிகள் மும்முரமாக நடக்கும். மக்கள் நல திட்டங்கள் விரைவாக சென்றடையும். பலன் இரு மடங்காகும். சூரிய சக்தி வீடுகள் திட்டம் 8 ஆயிரம் வீடுகளை சென்றுள்ளது. சூரிய மின்சக்திக்கு மத்திய அரசு சார்பில் ரூ.75 ஆயிரம் மானியம் கிடைத்தது. இதனால், 8 ஆயிரம் வீடுகள் என்றால் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளித்துள்ளது.ஆனால், மானியத்துடன் மட்டும் பலன் நிற்கவில்லை. சூரியசக்தியால் மின்கட்டணம் குறையும். மின்கட்டணம் மூலம் ஒவ்வொரு குடும்பம் ரூ.2 ஆயிரம் சேமிக்கிறார்கள். 8 ஆயிரம் வீடுகள் ஒட்டுமொத்தமாக 1.6 கோடி ரூபாயை சேமிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 19 கோடி ரூபாய் சேமிப்பு ஆகிறது.
சுறுசுறுப்பாக செயல்படும் மாநில அரசு இருந்தால் 1 லட்சம் வீடுகளை சென்றடையும். இதனால் ஏற்படும் தாக்கத்தை யோசிக்க வேண்டும். கோவை மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.800 கோடி மானியம் கிடைக்கும். மின்சாரத்தால் சேமிக்கும் பணம் ரூ.2,500 கோடியாக இருக்கும்.
முக்கியமான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. கோடிக்கணக்கான வங்கிக்கணக்குகள், வீடுகள், முத்ரா திட்டங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். பல நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகம் பேரை வறுமையில் இருந்து வெளியேற்றி உள்ளோம். எந்த தாமதமும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தப்படும் போது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலன் அடைகின்றனர். வளர்ச்சி அனைவரையும் சென்றடைகிறது. இதற்காக டபுள் இன்ஜின் தேஜ கூட்டணி அரசு தேவை.உங்களின் தேவை குறித்து நாங்கள் அக்கறை எடுத்து கொண்டு இருக்கிறோம்.
சேமிப்பு
2014 ம்ஆண்டுக்கு முன்பு 12 லட்ச ரூபாய்க்கு 2 லட்ச ரூபாய் வரி கட்ட வேண்டி உள்ளது. இன்று 12 லட்ச ரூபாய் வரை வரியே கிடையாது. இது நடுத்தர மக்களிடம் சேமிப்பு இருக்கும். ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்துள்ளோம். பொருள் வாங்கும்போது குறைந்த செலவு செய்கின்றனர். இதனால், நடுத்தர மக்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. குடும்பங்கள் சேமிக்க முடியும். அதிக முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியும்.
சேவை அதிகரிக்கும் போது தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கிறது. இதுசிறிய வியாபாரங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறது. பொருளாதாரவளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டில் சிறுகுறு தொழில்துறை மேம்பட்டு பொருளாதாரம் மேம்படும். தமிழகத்துக்கு பலன் கிடைக்கும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை கிடைக்கும். இது 75 வயது வரை வயது நீட்டிக்கப்பட்டுள்ளது.மூத்த குடிமக்களின் உடல்நலன் பிரச்னைக்கு தீர்வு அளித்து இருக்கிறோம். குழந்தைகள், முதியோரின் உடல்நலனில் தேஜ கூட்டணி அரசு அக்கறை கொண்டுள்ளது. மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீதம் குறைவாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு குடும்பமும் 12 ஆயிரம் சேமிப்பு கிடைக்கிறது.
அதேபோல் இதய ஸ்டண்ட்கள் விலைக்கு உச்சவரம்பினை நிர்ணயம் செய்தோம். இதனால் மக்களின் லட்சக்கணக்கான ரூபாய் மிச்சமாகி உள்ளது. ஸ்டண்ட் முதல் டயாலிசிஸ் வரை மூத்த குடிமக்களின் நலனில் அக்கறை எடுத்து செயல்படுத்தி உள்ளோம். குறைவான செலவு, உயர்தர மருத்துவ சேவை இதுவே எங்களின் குறிக்கோள்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டுக்கு கோவை வந்தேன். அந்த அனுபவத்தை மறக்க முடியாது. தமிழகத்தில் கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்களது புதுமைகளை காட்சிப்படுத்தினார்கள். அவர்களுக்கு தலைவணங்கினேன். தேஜ அரசு தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என உறுதி அளிக்கிறேன்.
திமுக அரசு விவசாயிகள் பற்றி எந்த அக்கறையையும் காட்டவில்லை. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேஜ கூட்டணி அரசு விவசாயிகள் நலனுக்கு முதன்மை அளித்து செயல்படும்.
விசாரணை
தமிழக மக்களுக்கு சிலஉத்தரவாதங்களை அளிக்க வந்துள்ளேன். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனேயே சட்டம் ஒழுங்கை சீர்செய்வோம். நில அபகரிப்பு,மணல், மதுபான குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். இது இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் பாஜவினர் சென்று, வாக்காளர்களையும், முதல்முறை வாக்காளர்கள், பெண்களை சந்தித்து, தேஜ கூட்டணியின் கொள்கைகளை விளக்கி, திமுக அரசின் தோல்வியை எடுத்துக்கூற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் பற்றியது என்பதை உரக்க சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வரலாறு காணாத வகையில் ஓட்டுப்பதிவு நடப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நேரலை
கோவையில் பிரதமர் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் தினமலர் சமுக வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது. இதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
