அத்திக்கடவு திட்டம் துவக்கம் இப்போதைக்கு இல்லை: முத்துசாமி
அத்திக்கடவு திட்டம் துவக்கம் இப்போதைக்கு இல்லை: முத்துசாமி
UPDATED : பிப் 07, 2024 07:39 AM
ADDED : பிப் 06, 2024 11:27 PM

''அத்திக்கடவு திட்டம் துவக்கப்படுவது, இப்போதைக்கு இல்லை,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.கோவை அருகே வையம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில், பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
இழப்பீடு இல்லை
அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி, நிருபர்களிடம் கூறியதாவது:அத்திக்கடவு திட்டத்தை சிலர் அரசியல் ஆக்குகின்றனர். இந்தத் திட்டத்தில், முந்தைய ஆட்சியின் போது, முதல் மூன்று நீரேற்று நிலையங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்படவில்லை.இழப்பீடு வழங்கப்படவில்லை. தற்போது பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சமாதானப்படுத்தி இழப்பீடு நிர்ணயித்துள்ளோம். ஆனால், ஆற்றில் போதுமான தண்ணீர் வரத்து இல்லை.
ஆறு மோட்டர்களில், மூன்றில் கூட முழுமையாக தண்ணீர் பம்ப் செய்ய முடிவதில்லை. குறைந்தபட்சம் நான்கு மோட்டார்கள் முழுமையாக தண்ணீரை பம்பிங் செய்தால் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும். 1,045 குளம் குட்டைகளுக்கும் நீர் அனுப்ப முடியும். எனவே இப்போதைக்கு துவக்கமில்லை.
நாங்கள் தயாராக இருக்கிறோம். தண்ணீர் வரத்து அதிகரித்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
உரிய நடவடிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவை வைத்துள்ள தொகை குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.அமைச்சரிடம் துாய்மை பணியாளர்கள் பலர், 'மாத சம்பளம் 5,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் சிரமப்படுகிறோம். சம்பளத்தை உயர்த்தி வழங்க
வேண்டும்' என்றனர்.கல்வி உதவித்தொகை, தொழில் செய்ய நிதியுதவி, அடிப்படை கட்டமைப்பு வசதி கோரி பலரும் அமைச்சரிடம் மனு அளித்தனர்.
--- நமது நிருபர் -

