இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்வர், நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு
இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்வர், நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு
UPDATED : செப் 13, 2025 07:35 PM
ADDED : செப் 13, 2025 06:06 PM

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தை கவுரவிக்கும் விதமாக, அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமை இளையராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இப்போதும் 82 வயதில் படங்களுக்கு இசையமைத்தும், சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து சாதித்து வருகிறார். இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதையடுத்து லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார். பின்னர் சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போனது.
இந்த விழா, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தேவயாணி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை 'அமுதே… தமிழே...' என்ற பாடலை பாடி இளையராஜா தொடங்கி வைத்தார். அதன்பிறகு, இளையராஜா இசை அமைத்த, 'மடை திறந்து பாயும் நதியலை நான்' என்ற பாடலை எஸ்பிபி சரண் பாடினார். எஸ்பிபி பாடிய, 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலை சரண் பாடியபோது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
செந்தூரப் பூவே பாடலை பாடிய பாலிவுட் பாடகி விபாவரி ஆப்தே ஜோஷிக்கு தமிழ் தெரியாத நிலையிலும், சிறப்பாக பாடியதாக பாராட்டிய கமல், 'இந்த நிகழ்ச்சியில் பட்டியலிடப்பட்டுள்ள பாடல்கள் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்தது,' எனக் கூறினார்.
இளையராஜாவின் கலையுலக சாதனைகளை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு அவருக்கு ராஜ்யசபா நியமன எம்.பி., பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.