ADDED : ஏப் 18, 2024 08:58 PM
சென்னை:''ஓட்டுச்சாவடியில் முதியோர், கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
ஓட்டுச்சாவடிகளில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. அனைவரும் ஒரே வரிசையில் நிற்க வேண்டும். ஆனால், முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவர்களை அழைத்து செல்ல, ஓட்டுச் சாவடியில் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் உதவி செய்வர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், குறைந்தது ஒரு 'வீல் சேர்' இருக்கும். அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓட்டுச்சாவடி உள்ள இடத்திலிருந்து, 200 மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், ஓட்டுச் சாவடிகளில் இருந்து அழைத்து செல்வதற்கும், வேட்பாளர் அல்லது முகவர் வாகனத்தை, வாடகைக்கு எடுக்க அல்லது வாங்க அல்லது பயன்படுத்த, எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது.
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்களின், அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம், ஓட்டுச் சாவடியில் இருந்து, 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை, அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

