கட்சியை மறுசீரமைக்க உதயநிதி தீவிரம் அறிவாலயத்தில் குவிந்த புகாரால் அதிரடி
கட்சியை மறுசீரமைக்க உதயநிதி தீவிரம் அறிவாலயத்தில் குவிந்த புகாரால் அதிரடி
ADDED : மே 14, 2024 11:32 PM
ஒரு மாத காலமாக, தீவிர பிரசாரத்தில் வலம் வந்த அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடித்த சூட்டோடு, ஓய்வு எடுப்பதற்காக லண்டன் சென்றார்.
இரு வார ஓய்வுக்குப் பின், சென்னை திரும்பியவர், சென்னை நீலாங்கரை வீட்டில், தற்போது கட்சியை சீரமைப்பதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும், கடுமையாக களத்தில் நின்று பணியாற்றாததால், பெரிய அளவில் தி.மு.க.,வுக்கு சிக்கல் இல்லை. இருந்தபோதும், ஆட்சி நிர்வாகத்தால் ஏற்பட்ட அதிருப்தியைக் கடந்து, களத்தில் கட்சியினர் காட்டிய அதிரடிகளால், கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
கட்சியில் ஒரு சிலர் நடந்துகொள்ளும் விதத்தால், பல ஊர்களிலும் கட்சியினர் கோஷ்டிகளாக செயல்பட்டு மோதிக் கொண்டுள்ளனர்.
இதனால், அ.தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், பா.ஜ., தலைமையில் ஒரு அணியுமாக லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட போதும், தி.மு.க., கூட்டணியால் தேர்தல் களத்தில் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை, தி.மு.க.,வால் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாமல் போனது.
குறிப்பாக, தி.மு.க., தரப்பில், தேர்தலுக்காக மக்களுக்கு பரிசு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஊர் ஊருக்கு பரிசுகள் கொண்டு சேர்க்கப்பட்டன. ஆனால், அந்த பரிசுகள் எல்லாம் கடைசி கட்டத்தில் இருக்கும் மக்களுக்கு முறையாக சேர்க்கப்படவில்லை.
தமிழகம் முழுதும் நடந்த இந்த மாதிரியான பல சம்பவங்கள், 'வாட்ஸாப்' வாயிலாகவும், எழுத்துப்பூர்வமான புகார்களாகவும், உதயநிதிக்கும், அறிவாலயத்துக்கும் வந்து குவிந்தன. தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் முழுதும் பயணித்த உதயநிதியிடம், ஆங்காங்கே இருக்கும் கட்சியினரும் நேரிலேயே புகார் அளித்தனர்.
இதையெல்லாம் தேர்தல் முடிந்த கையோடு ஒழுங்குபடுத்துவதாக, பலரிடம் வாக்குறுதி அளித்த உதயநிதி, எல்லா தகவல்களையும் ஒருசேர எடுத்துக் கொண்டு, நீலாங்கரை வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த மூன்று நாட்களாக, ஒவ்வொரு புகாரையும் தானே படித்து குறிப்பெடுக்கும் உதயநிதி, கட்சியினர் செயல்பாடுகள் குறித்து கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்திருக்கிறார்.
உதாரணமாக, தர்மபுரி மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டவர், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி சொல்வதைக் கேட்டுத்தான் செயல்படுகிறார் என, புகாரில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அதேபோல, மாவட்ட செயலர்கள் அதிரடியாக இருப்பதோடு, மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருப்பதால், கட்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் பலவீனப்படுவதையும் சுட்டிக் காட்டி உள்ளனர்.
கட்சியின் கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் செயல்பாடுகள் கட்டுத்தறியின்றி இருப்பதால், கட்சி நிர்வாகம் சரிவர செயல்படுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், தேர்தல் முடிந்த கையோடு மொத்த கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் களையெடுப்புகளை நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார் உதயநிதி. அப்படிச் செய்தால் தான், அடுத்த இரு ஆண்டுகளில் வர இருக்கும் சட்டசபை தேர்தலை, அச்சமின்றி தி.மு.க., சந்திக்க முடியும் என்ற எண்ணத்துக்கு உதயநிதி வந்திருக்கிறார்.
உதயநிதியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் கட்சியினர் பலரும், புதிதாக நியமிக்கப்படும் மா.செ.,க்களில் தாங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று, மூத்த அமைச்சர்களின் இல்லங்களை முற்றுகையிடுகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

