எந்த அரசு வேண்டுமென நீங்களே யோசித்து முடிவு செய்யுங்க: ம.நீ.ம., தலைவர் பேச்சு
எந்த அரசு வேண்டுமென நீங்களே யோசித்து முடிவு செய்யுங்க: ம.நீ.ம., தலைவர் பேச்சு
ADDED : ஏப் 15, 2024 09:40 PM

பொள்ளாச்சி:''எந்த அரசு வேண்டுமென நீங்களே யோசித்து முடிவு பண்ணனும்,'' என, ம.நீ.ம., தலைவர் கமலஹாசன் பேசினார்.
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பேசியதாவது:
பொள்ளாச்சிக்கும், எனக்கும், 60 ஆண்டுகள் தொடர்பு உள்ளது. சிறுவனாக இருந்த போது, மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் விடுமுறையில் நாடகம் நடக்கும். அதற்காக ஆண்டுதோறும் இரு மாதங்கள் வந்து தங்குவேன்; 20 நாட்கள் நாடகம் நடக்கும்.
பொள்ளாச்சியில் இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன. மொத்த தமிழகத்தில், நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. இதற்காக வளர்ச்சி வாரியம் அமைத்தது; உழவர் சந்தை அமைத்தது, சந்தைக்கு சுமைகளை எடுத்துச் செல்ல பஸ்சில் டிரான்ஸ்போர்ட் கூலி இல்லாமல் செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. மேலும், அவரது ஆட்சியில், விவசாய கடன், 7,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார்; இன்றைய கணக்குப்படி பல லட்சம் கோடிகள் வரும்.இது தான் திராவிட மாடல்; திராவிட மாடலை கிண்டல் செய்யாதீங்க; நம்ம மாடல்; நாம் அது தான். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், இலவச மின்சாரம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உள்ளது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இரண்டு லட்சம் மின் இணைப்புகள். இவை எல்லாம் செய்தவை; செய்யப்போகவை இன்னும் இருக்கின்றன.கடந்த, 10 ஆண்டுகளில் விவசாய நலனுக்காக மத்திய அரசு என்ன செய்துள்ளது; ஒன்றும் செய்யவில்லை என்பது தான் உண்மை.
விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்கத்தான் டில்லி போனார்கள்; சீனாவில் இருந்து ஊடுருபவர்கள் வந்தால் எப்படி தடுக்க வேண்டுமோ அந்த மாதிரி விவசாயிகள், ஆணி படுக்கை போட்டு வரவேற்றனர்.
எந்த அரசு வேண்டும் என நீங்கள் யோசித்துமுடிவு பண்ணனும்; விவசாயம் செழிக்கனும், சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டுமென்றால், எந்த அரசுக்கு ஓட்டு போட வேண்டும் என உங்களுக்கு தெரியும்.நல்லதை நினைத்து நல்லதை யோசித்து ஈஸ்வரசாமிக்கு ஓட்டு அளியுங்கள்; நாளை நமதாக வேண்டுமென்றால் அதை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மூன்று மணி நேரம் காத்திருப்பு:பொள்ளாச்சியில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து ம.நீ.ம., தலைவர் கமலஹாசன் பேசுவதையடுத்து, கட்சியினர், கூட்டணி கட்சியினர் என அனைவரும் மாலை, 5:00 மணி முதலே காத்திருந்தனர். இதோ வருகிறார் என அவ்வப்போது நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இரவு, 8:00 மணிக்கு வந்த கமலஹாசன், ஐந்து நிமிடம், 59 நொடிகள் மட்டுமே பேசிவிட்டு சென்றார். இதற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தோம் என கூட்டத்துக்கு வந்தவர்கள் புலம்பியபடி கலைந்து சென்றனர்.

