ADDED : ஏப் 20, 2024 09:48 PM

ஏப்ரல் 21, 1925
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டைக்கு அருகில் உள்ள கண்டதேவி எனும் ஊரில், சுந்தரராஜ அய்யங்கார் - அலமேலு அம்மாள் தம்பதியின் மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் அழகிரிசாமி.
இவர், தன் தாத்தா ஸ்ரீநிவாச அய்யங்காரிடம் வயலின் வாசிக்க கற்றார். தொடர்ந்து, கண்டதேவி செல்லம் அய்யங்கார், டி.சவுடய்யா ஆகியோரிடம் வயலின் இசையின் நுணுக்கங்களை கற்றார். தன் குருவுடன் இணைந்து பல்வேறு கச்சேரிகளை செய்தார்.
கர்நாடக சங்கீத பாடகர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, பி.எஸ்.நாராயணசாமி, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், ஜி.என்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பக்கவாத்திய கலைஞராக வயலின் இசைத்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் உள்ளிட்ட பிரபலங்கள் கச்சேரிக்கு சென்றபோது, இவரையும் அழைத்து சென்றனர்.
இவர், 'சோலா'வாகவும் வயலின் கச்சேரிகளை நடத்தினார். 'சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி' விருதுகளை பெற்றுள்ளார். தன் 75வது வயதில், 2000வது ஆண்டு, அக்டோபர் 13ல் மறைந்தார். உலகம் சுற்றிய, 'வாத்ய ரத்னா' பிறந்த தினம் இன்று!
