முதியோர் உதவித்தொகை கையாடல்: விசாரிக்க கமிட்டி அமைத்தார் கலெக்டர்
முதியோர் உதவித்தொகை கையாடல்: விசாரிக்க கமிட்டி அமைத்தார் கலெக்டர்
ADDED : ஜூன் 01, 2024 02:15 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இறந்த பயனாளிகளின் வங்கி கணக்கை அகற்றிவிட்டு தனக்கு வேண்டியவர்களின் வங்கி கணக்குகளில் முதியோர் உதவித்தொகையை வரவு வைத்து ரூ.48 லட்சம் கையாடல் செய்த விவகாரத்தில் 'கணக்கில் வராத' ஊழியரிடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் இது தொடர்பாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட கமிட்டியை கலெக்டர் ஜெயசீலன் அமைத்துள்ளார்.
அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் செம்பட்டியை சேர்ந்த ஒருவரை வருவாய்த்துறையினர் முதியோர் உதவி தொகை திட்ட பிரிவில் பணிக்கு வைத்துள்ளனர். இவர் ஒப்பந்த ஊழியரோ, அரசு பணியோ கிடையாது. 'கணக்கில் வராத' இந்த ஊழியர் முதியோர் உதவி தொகை பெறும் பயனாளர்களின் விவரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை செய்தார்.
2019 முதல் 2024 வரை பயனாளிகளில் இறந்தவர்களின் பெயரை அகற்றாமல் அவர்களது வங்கி கணக்கை மட்டும் தனது சொந்த, தெரிந்தவர்களின் வங்கி கணக்காக மாற்றியுள்ளார். அந்த கணக்குகளுக்கு முதியோர் உதவி தொகை தொடர்ந்து வரவு வைக்கப்பட்டுள்ளது.
எந்த அதிகாரியும் இதை கவனிக்கவில்லை. குறிப்பிட்ட சில கணக்குகளுக்கு அதிக பணம் செல்வதாக சென்னையில் முதியோர் உதவி தொகை திட்டத்தின் மாநில பிரிவினர், அருப்புக்கோட்டை தாலுகா அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கணக்குகளை ஆய்வு செய்த சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி இறந்தவர்களின் பெயரை அகற்றினார். அப்போது அதில் அதிகம் பேர் இறந்ததாக தெரிந்தது. ஒரு மாதத்தில் இத்தனை பேர் இறந்துள்ளனரா என ஆய்வு செய்த போது இறந்த தேதி வேறு வேறு ஆண்டுகள், மாதங்களில் இருந்தது.
இதையடுத்து சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் அனிதா விசாரித்ததில், ரூ.48 லட்சம் வரை அந்த கணினி உதவியாளர் தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது தெரிந்தது.
5 பேர் கமிட்டி
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரது வங்கி கணக்கில் ரூ.15 லட்சத்தை முடக்கியது. சம்மந்தப்பட்ட நபரிடம் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), கருவூல உதவி அலுவலர்கள் இருவர், முதியோர் உதவி தொகை திட்ட பிரிவின் உதவியாளர் என ஐந்து பேர் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தாலுகா அலுவலகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாதவரிடம் எப்படி தாசில்தாரின் யூஸர் நேம், பாஸ்வேர்ட் சென்றது என்பது பற்றியும், மேலும் வேறு தாலுகாவிலும் இந்த கையாடல் நடந்துள்ளதா என்றும், அரசு பணியில் உள்ள யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

