சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டவில்லை - குடிநீர் தேவைக்கான சிறிய தடுப்பு அது தீர்ப்பாயத்தில் கேரள அரசு அறிக்கை
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டவில்லை - குடிநீர் தேவைக்கான சிறிய தடுப்பு அது தீர்ப்பாயத்தில் கேரள அரசு அறிக்கை
ADDED : ஜூலை 24, 2024 01:14 AM
சென்னை:சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என்றும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க, 1 மீட்டர் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது என்றும், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கேரள நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில், அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இதனால், அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வருவது நின்று போகும் என்றும், திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 55,000 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும் என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய வன உயிரின வாரியம் ஆகியவற்றிடம், கேரள அரசு உரிய அனுமதிபெறறுள்ளதா' என்று கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதன்படி, தீர்ப்பாயத்தில் கேரள நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கை:
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், வட்டவடா ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் வழங்க, சிலந்தி ஆற்றின் குறுக்கே, 'வெயிர்' அணை, அதாவது 1 மீட்டர் உயரத்தில் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது.
இதற்காக, சிலந்தி ஆறு கருப்பசாமி கோவில் அருகே, 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 2,695 மீட்டர் உயரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கவே இந்த ஏற்பாடு.
குடிநீர் தேவைகளுக்காக சிறிய அளவில் தடுப்புகளை ஏற்படுத்த, சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை. குடிநீர் தேவைக்காக என்பதால், குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படும். இதனால், அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் செல்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே நடக்கும் கட்டுமானப் பணிகளின் படங்களையும், கேரள நீர்வள ஆணையம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.

