ADDED : ஏப் 04, 2024 06:17 AM
சென்னை: சென்னையில், வருமான வரித் துறை நடத்திய சோதனையில், 4 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது.
தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்ய, சென்னையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
சென்னை கொண்டித்தோப்பு, ஏழுகிணறு, புரசைவாக்கம், கொரட்டூர், ஓட்டேரி ஆகிய இடங்களில் உள்ள, எலக்ட்ரிக்கல் வணிகம் செய்யும் தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகங்களில், நேற்று முன்தினம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், மொத்தம், 4 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பிடிபட்டது.
இதில் கொரட்டூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மட்டும், 2.5 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. மேலும், தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களிலும், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

