இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்திற்கு உதவித்தொகை உயர்வு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்திற்கு உதவித்தொகை உயர்வு
ADDED : ஜூலை 30, 2024 01:43 AM
சென்னை : ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள், 26ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்து பேசினர். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவற்றை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவு:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு, தற்போது உதவித்தொகையாக தினமும், 250 ரூபாய் வழங்கப்படுகிறது. இனி அது, 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, நெடுங்காலமாக உள்ள, 127 படகுகளை மீட்க இயலவில்லை.
அவற்றுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நிவாரணத்தொகை, விசைப்படகுகளுக்கு, 5 லட்சம் என்பது 6 லட்சம் ரூபாயாகவும், நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்பட்ட, 1.5 லட்சம், 2 லட்சம்ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
பாம்பன் துாக்குப்பாலம் அருகே துார் வார வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அங்கு தேவையான ஆய்வுகள் நடத்தி, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள, 87 மீனவர்கள் மற்றும் 175 படகுகளை மீட்க, பார்லிமென்டில் வலியுறுத்தவும், எம்.பி.,க்கள் குழு வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும், முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

